விவசாயிகளின் கழுத்தை பிடிக்க முடியும் என ஜனாதிபதி கூறுகின்றார், அவருடடைய தலையில் ஒரு கோளாறு உள்ளதை போன்று தெரிகிறது என தேவால்ஹிந்த அஜித தேரர் (Venerable Dewalehinda Ajitha Thero) காட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வரும் போது விவசாயிகளுக்கு இலவசமாக பசளை வழங்குவோம் என சத்தமாக கூறி வந்தார்கள். இதனை நம்பி விவசாயிகள் அனைவரும் வரிசையில் சென்று வாக்குகளித்தார்கள்.
ஆனால் தற்போது இந்த அரசாங்கம் அந்த விவசாயிகளின் கழுத்தை பிடிப்போம் என சொல்கிறது. இயற்கை பசளையை உபயோகிக்காவிட்டால் இராணுவத்தினரை கொண்டு விவசாயிகளின் கழுத்தை பிடித்து செய்ய வைக்க முடியும் என்று கூறுகின்றனர்.
இந்த கதைகளை கேட்டால் சிரிப்பு தான் வருகின்றது. சமூக வலைத்தளங்களில் சிறுவர்கள் கூட ஜனாதிபதியின் அந்த கருத்தை வைத்து நகைச்சுவையாக பதிவுகளை இட்டுள்ளார்கள்.
அர்ஜுன் மகேந்திரன், அதே போல் மக்கள் பணத்தை சொத்தை களவாடியவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள், பாரிய மோசடிகளில் ஈடுபட்டவர்கள், குற்றம் செய்தவர்கள் என கழுத்தை பிடித்து உள்ளே அனுப்ப வேண்டிய நிறைய பேர் உள்ளனர்.
அவர்களின் கழுத்தை தான் பிடிக்க வேண்டும். அதை விட்டு விவசாயிகளின் கழுத்தை பிடிக்க முடியும் என ஜனாதிபதி கூறுகின்றார். அவருடடைய தலையில் ஒரு கோளாறு உள்ளதை போன்று தெரிகிறது.
விளக்கு அணையும் முன்னர் பெரிய பிரகாசத்தை கொடுக்கும் அதைப்போன்று தான் ஜனாதிபதியின் செயற்பாடுகளும், மக்களுக்கு எதிரான பேச்சுக்களும் காணப்படுகின்றது.
விவசாயிகளின் பிரச்சினைகளை இணங்கண்டு விரைவாக அவற்றுக்கு ஒரு தீர்வை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.