பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அந்நாட்டின் அதிபர் மாளிகை அமைந்துள்ளது. எலீசே அரண்மனை என்று அழைக்கப்படும் இந்த மாளிகையில் பணி புரிந்த ராணுவ வீராங்கனை, கடந்த ஜூலை மாதம் சக ராணுவ வீரரால் கற்பழிக்கப்பட்டதாக அந்த நாட்டின் ஊடகங்களில் வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் அதிபர் மாளிகையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிக்கு பின் மது அருத்திய ராணுவ வீரர் தன்னை கற்பழித்ததாக பாதிக்கப்பட்ட ராணுவ வீராங்கணை தெரிவித்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த ராணுவ வீரரிடம் விசாரிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் மீது முறையாக வழக்கு தொடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த பிரச்சினை தொடர்பான விவரங்கள் கிடைத்த பின், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிபர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சுமத்தப்பட்ட ராணுவ வீரர் மற்றும் பாதிப்புக்குள்ளான ராணுவ வீராங்கனை ஆகிய இருவருமே வெவ்வேறு பணிகளுக்கு மாற்றப்பட்டதாகவும் அதிபர் மாளிகை கூறியுள்ளது. எனினும் பிரான்ஸ் அரசு வக்கீல்கள் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.