தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட குழுவினர் இன்று அமெரிக்கா சென்றுள்ளனர்.
மூத்த வழங்கறிஞர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கனகீஷ்வரனும் மூத்த சட்ட விரிவுரையாளராக இருந்த கலாநிதி நிர்மலா சந்திரகாசனும் அமெரிக்காவுக்கு பயணித்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உறுதிப்படுத்தியுள்ளார்.
அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, சிரேஷ்ட சட்டத்தரணிகள் சிலருக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
நாட்டில் அரசியல் தீர்வு தொடர்பிலான நிபுணர் குழுவின் நிலைப்பாடு, சமஷ்டிக் கட்டமைப்பிலேயே இதை மேற்கொள்வது தொடர்பிலான முன்மொழிவுகள் உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியிலான விடயங்களை தெரிந்துகொள்வதற்கும் அது தொடர்பிலான தமது யோசனைகளை பரிமாறிக்கொள்வதற்கும் அமெரிக்கா அழைப்பு விடுத்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கடந்த வாரத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த விஜயத்தில் அமெரிக்க அரசியலமைப்பு சட்ட நிபுணர்களுடன் சில கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.