ஐக்கிய மக்கள் சக்தியினரின் போராட்டதை தான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினர் நாளை அல்லது நாளை மறுதினம் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தயாராகி வருகிறார்கள். எதற்காக இப்போராட்டம்? நாட்டை வளர்ச்சியடைய செய்யவா? நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவா? இல்லை. கொரோனா வைரஸை பரப்பி நாட்டை மீண்டும் பாதாளத்துக்கு தள்ளுவதற்கே போராடப்போகிறார்கள். பொலிஸார் என்றவகையில் நாம் இதனை அனுமதிக்கப்போவதில்லை என்றார்.
நீதிமன்றம் நாளை வழங்கும் உத்தரவுக்கு அமைய பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள். பாரபட்சமின்றி அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும். பொலிஸாருக்குப் பொறுப்பான அமைச்சர் என்றவகையில் யார் என்ன கூறினாலும் போராட்டத்தை தான் அனுமதிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு கிடைத்தப் பின்னர் மக்கள் ஒன்றுகூடும் போராட்டங்களில் ஈடுபடுவோர், போராட்டத்தை ஒழுங்கமைத்தவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.