ருமேனியாவில் ராணுவ ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
ஐரோப்பிய நாடான ருமேனியாவில் உள்நாட்டு ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை ’பாபினி மெக்கானிக்கல் தொழிற்சாலை’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. தயாரிக்கப்படும் ஆயுதங்கள் அந்த நிறுவனத்திலேயே பரிசோதனையும் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் வெல்சியா நகரில் உள்ள அந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கண்ணிவெடிகளை செயலிழக்கச்செய்யும் சோதனை இன்று நடைபெற்றது. இந்த சோதனையில் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, கண்ணிவெடியை செயலிழக்கச்செய்யும் முயற்சியின் போது அது திடீரென வெடித்துச்சிதறியது. இந்த வெடிவிபத்தில் தொழிற்சாலை ஊழியர்கள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடிவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.