அரசாங்கத்தினால், நாட்டுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாத காரணத்தினால், நாட்டை மூட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் (S.M.Marikkar) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ள காரணத்தை எதிர்க்கட்சியின் மீது சுமத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. எனினும் ஐக்கிய மக்கள் சக்தி இதற்கு இடமளிக்காது.
தற்போதைய அரசாங்கத்தின் திறமையற்ற நிதி முகாமைத்துவம் காரணமாக எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல முடியாது என்ற உண்மையை மக்களுக்கு கூற வேண்டும் எனவும் எஸ்.எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.