1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் அது அமலுக்கு வரும். அதுவே அந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமானால், அதற்கும் சில நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவை என்ன?

இந்தியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பு, விவசாயிகளின் தொடர் போராட்டங்களை மீறி அந்த சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் தெரிவித்தாலும், உச்ச நீதிமன்ற உத்தரவின் காரணமாக, அந்த சட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோதி சர்ச்சைக்குரியதாக கருதப்படும் அந்த மூன்று சட்டங்களை நிறுத்தும் நடைமுறைகள் இந்த மாதம் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது மேற்கொள்ளப்படும் என்று கூறியிருக்கிறார்.

அத்தகைய ஒரு நடைமுறையை மேற்கொள்வதென்றால் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே விவரிக்கிறோம்.

மத்திய அரசு ஒரு சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த எத்தகைய நடைமுறைகளை மேற்கொள்கிறதோ அதே நடைமுறையைத்தான் அந்த குறிப்பிட்ட சட்டத்தைத் திரும்பப் பெறும் நடைமுறையை தொடங்கும்போதும் மேற்கொள்ள வேண்டும்.

மக்களவைச் செயலக குறிப்பின்படி, "சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இருப்பதைப் போலவே, சட்டங்களை ரத்து செய்யும் அதிகாரமும் அதற்கு உண்டு. நாடாளுமன்றத்தின் செயல்திறன் அதாவது அதன் பெரும்பான்மையை பொறுத்தே அமையும்.

பெரும்பான்மை பலம் இல்லாவிட்டால், அந்த சட்டத்தை திரும்பப் பெறும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இல்லாததாக கருதப்படும்.

முந்தைய சட்டங்களை ரத்து செய்வதற்கான அதிகாரத்துக்கு எந்த அரசியலமைப்புத் தடைகளும் கிடையாது. ஆனால் அது மிக அவசியமான நோக்கத்துக்காகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.

இத்தகைய சட்டத்தை திரும்பப் பெறும் முன்மொழியை அரசாங்கமே அதன் தரப்பில் இருந்து முன்மொழிய வேண்டும். சட்டத்தை ஏன் ரத்து செய்கிறோம், ஏன் அது அமல்படுத்தப்பட முடியாமல் போகிறது என்ற விவரம் அந்த சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

இப்போது மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற அதற்கு வகை செய்யும் மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்மொழிய வேண்டும் என்கிறார் மக்களவை முன்னாள் செகரட்டரி ஜெனரல் பிடிடீ ஆச்சார்யா. இதை தனித்தனி மசோதாக்களாகவோ அல்லது ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பதால் ஒரே மசோதாவாகவோ மத்திய அரசு அறிமுகப்படுத்தி திரும்பப் பெறும் தீர்மானத்தை முன்மொழியலாம். அநேகமாக அது குரல் வாக்கெடுப்பு மூலமாகவே அவையின் பெரும்பான்மை பலத்தைப் பெற்று திரும்பப் பெறலாம்.

இந்த சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அவற்றுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருந்தாலும், நடைமுறையில் அவை செயல்பாட்டுக்கு வரவில்லை. இத்தகைய சூழலில் நாடாளுமன்றத்தில் மட்டுமே அவற்றை திரும்பப் பெறும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். அதற்கு வெளியே மத்திய அரசு வெளியிடும் எந்தவொரு அறிவிப்பும் சட்ட அந்தஸ்தைப் பெறாது என்பதே நிபுணர்களின் கருத்து

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி