மாத்தறை வெலிகம பெலன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் (20) ம் திகதி இரவு முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்த போது 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சொய்சாவிற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விருந்தில் கொக்கெய்ன், ஐஸ், கஞ்சா மற்றும் பிற போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், இந்த விருந்தில் போதைப் பொருள்களை ஊக்குவித்து விற்பனை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தனமல்வில பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரியான தனமல்வில ஆப்பு சுதா என அழைக்கப்படும் அளுத்பதபெந்திகே சமில பிரசாத் என்பவரே இந்த முகநூல் விருந்தை ஏற்பாடு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் தனமல்வில, அஹங்கம, மாத்தறை, ஹிக்கடுவ, திஸ்ஸமஹாராம மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விருந்து இடம்பெற்ற 'நெப்டியூன்' ஹோட்டல் வெலிகம மேயருக்கு சொந்தமானது எனவும் தெரியவந்துள்ளது. வெலிகம நகர சபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது.