மூன்று மாதங்களுக்கு முன்னர் காலமான சிரேஸ்ட அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் அஸ்தி இன்று (நவ.25) காலை 10 மணிமுதல் பிற்பகள் 6 மணிவரை கொழும்பு 08, பௌத்தலோக மாவத்தை, இல. 483, ஜயரத்ன மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.கொவிட் தொற்று காரணமாக அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியாத நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் 'சமரவீர அறக்கட்டளை' இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், நவம்பர் 26ஆம் திகதி திரு மங்கள சமரவீரவின் அஸ்தி பொதுமக்களின் அஞ்சலிக்காக மாத்தறையில் உள்ள பழைய டச்சு சந்தை கட்டிட வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும். அஸ்தி மாலை 4.00 மணியளவில் மாத்தறை அனகாரிக தர்மபால மாவத்தை மற்றும் ஹக்மன வீதி வழியாக மாத்தறை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
2021 நவம்பர் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நேரில் வரும் அனைவரையும் கொவிட் பாதுகாப்பு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கடைப்பிடிக்குமாறு 'சமரவீர அறக்கட்டளை' சார்பாக ஜயந்த சமரவீர குணவர்தன அன்புடன் கேட்டுக்கொள்கிறார்.
ஹர்ஷவிடம் இருந்து சான்றிதழ்
இதேவேளை, மங்கள சமரவீரவின் 3மாத நினைவு தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, தான் சந்தித்த தலைவர்களில் மறைந்த மங்கள சமரவீர சிறந்த தலைவர் என தெரிவித்துள்ளார்.
அவரிடம் இருந்து தான் கற்றுக்கொண்ட தாராளவாத சிந்தனைகளையும், இளைஞர் சமுதாயத்தையும் இணைத்து நாட்டை வளர்ச்சிப்பாதையை நோக்கி இட்டுச்செல்ல அதிகபட்ச ஆற்றலைப் பயன்படுத்துவதாகவும் அவர் சபதம் செய்தார்.