இலங்கையில் தைத்த ஆடைத் தொழில் துறை, தேயிலைத் தோட்ட பொருளாதாரம், சுற்றுலா தொழிற்துறை மற்றும் வீட்டுப் பணி என்ற வகையில் அடிமைத் தொழில் சம்பந்தமாக குற்றச்சாட்டு எழும் நிலையில் அடிமை தொழில் பயன்பாடு சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் மன்றம் தலையீடு செய்யவுள்ளது.
இதன்படி, சமகால அடிமைத்தனம் சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் விசேட தலையீட்டாளரான டொமோயா ஒபொகட்டா 2021 நவம்பர் 26லிருந்து டிசம்பர் 03ம் திகதி வரை தனது முதலாவது இலங்கை விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளவாறு இந்த விசேட பிரதிநிதி இந்நாட்டு தைத்த ஆடைத் தொழிற்துறை, தேயிலைத் தோட்டத் தொழிற்துறை, சுற்றுலாத்துறை மற்றும் வீட்டுப் பணி போன்ற துறைகளில் உழைப்பு நிலைமைகளை ஆய்வு செய்யவுள்ளார்.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட முறையான வேலை வாய்ப்பில் நுழைவதற்கு தடையாக இருக்கும் சட்டங்கள் மற்றும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள பலவீனங்கள் மற்றும் முறையான தடைகளை மதிப்பிடுவதற்கு சிறப்பு பிரதிநிதி உத்தேசித்துள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள ‘நிலையான அபிவிருத்தி இலக்குகளின் 8.7 அடைவதற்காக இலங்கை அரசாங்கம் ஏற்கனவே செய்துள்ள ‘அர்ப்பணிப்புகளை” கருத்தில் கொண்டு இந்த விடயத்தில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, குறைபாடுகள் எவை என்பதையும், அவற்றிற்கு தீர்வுகாண எப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதையும் மதிப்பீடு செய்வதில் ஆர்வத்துடன் இருப்பதாக ஐ.நா.மன்றத்தின் விசேட பிரதிநிதி ஒபோகாட்டா கூறுகிறார்.
கட்டாய உழைப்பை ஒழிப்பதற்கும், நவீன அடிமைத்தனம் மற்றும் மனித வியாபாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், சிறுவர் படையினரை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் பயன்படுத்தல் போன்றவறை ஒழிப்பதற்கும் மற்றும் 2025 நிறைவுறும் போது இந்நாட்டிலிருந்து சிறுவர் உழைப்புச் சுரண்டலை தடுப்பதற்கும் உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் எடுப்பதற்கு அரச தலையீடு தேவைப்படுமெனவும் விசேட பிரதிநிதி அறிவித்துள்ளார்.
இந்நாட்டிற்கான விஜயத்தை முடித்துக் கொண்டு வெளியேறும் அவர் 2022 செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டின் 51வது கூட்டத் தொடரில் தனது இலங்கை விஜயம் குறித்து அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்கவுள்ளார்.