நாடு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கும் இவ்வேளையில் இளைஞர்கள் முன் வந்து நாட்டைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என்று மறைந்த முன்னால் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் காலமான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு நேற்று (நவம்பர் 25) இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு வெளியேறும் போதே முன்னாள் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் அஸ்தி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கொழும்பு 08, பௌத்தலோகமாவத்தை இலக்கம் 483, ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் செயற்பாட்டாளர்கள் குழுவுடன் கட்சியின் தலைவரும் கலந்துகொண்டார். இவர்களில் அண்மையில் கட்சியின் செயற்குழுவில் இணைந்த தினுக் கொலம்பகே, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் துமிந்து ஆட்டிகல, இளைஞர் முன்னணியின் உறுப்பினர்களான பசிந்து குணரத்ன, சஜான் சூரியாராச்சி மற்றும் இளம் அரசியல் செயற்பாட்டாளர்கள் அடங்கிய குழுவும் உள்ளடங்குகின்றனர்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர் மங்கள சமரவீர, அரசியலில் விரக்தியடைந்த இளைஞர்களின் எதிர்காலத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டமொன்றை அண்மையில் முன்னெடுத்ததாகவும், தானும் அவ்வாறான செயற்பாடுகளில் பல தடவைகள் கலந்துகொண்டதாகவும் தெரிவித்தார்.
தற்போதுள்ள அரசியலை இளைஞர்கள் கடுமையாக வெறுப்பதாகவும், அவர்கள் அனைவரும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். இவ்வாறான நிலையில் இளைஞர்களுக்கான மங்கள சமரவீரவின் ‘சுதந்திர மையம்’ போன்ற வேலைத்திட்டங்கள் மிகவும் காலத்திற்கேற்றவை என அவர் தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் தங்களின் பொறுப்புகளை ஏற்று இவ்வாறான வேலைத்திட்டங்களில் இணைவதில் முன்னிலை வகிக்க வேண்டும் என தெரிவித்த முன்னாள் பிரதமர், நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இளைஞர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தம்முடன் இணைவதற்கான கலந்துரையாடல்களில் தற்போது பெருமளவிலான சுறுசுறுப்பான இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் திரு. விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.