திருகோணமலை, மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 4ஆம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த மக்கள், தங்களுடைய சொந்தக் காணிகளை தமக்கு மீட்டுத் தருமாறு கோரி, திருகோணமலை மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் இன்று (29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1983ஆம் ஆண்டு, தமது சொந்த காணிகளை விட்டு வெளியேறி, இந்தியாவிலும் அகதி முகாம்களிலும் வாழ்ந்து வந்ததாகவும் தற்போது தங்களுடைய காணிகளுக்குள் செல்லவிடாமல் தடுப்பதால், தமக்குரிய காணிகளை அரச அதிகாரிகள் பெற்றுத்தர வேண்டுமென அவர்கள் கோரினர்.
யுத்த காலத்தின் போது 83 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் காணிகள் கைவிடப்பட்ட நிலையில், தற்போது அக்காணிகளில் வேறு பிரதேசங்களிலிருந்து வந்தவர்களால் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
தமக்கு உரிய ஆதாரங்கள் காணப்படுகின்ற போதிலும், மொரவெவ பிரதேச செயலக அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்தவில்லையெனவும் தமிழ் மக்களுக்குரிய காணிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குற்றஞ்சாட்டினார்.
குறித்த காணிகள் தொடர்பில், திருகோணமலை மாவட்டச் செயலாளர் சமன் தர்ஷன பாண்டி கோரள விசாரணைகளை மேற்கொண்டு, எதிர்வரும் டிசெம்பர் 30ஆம் திகதிக்குள் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுப்பதாக வாக்குறுதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.