வீட்டு எரிவாயு அல்லது சிலிண்டர்கள் தொடர்பான பிரச்சனைகளை 1311 என்ற ஹொட்லைன் இலக்கத்திற்கு தெரிவிக்கலாம்.
நாடு முழுவதும் தொடரும் எரிவாயு விபத்துக்களை மையப்படுத்தி, நுகர்வோரின் வசதிக்காக இந்த ஹொட்லைன் இலக்கம் அறிவிக்கப்பட்டிருப்பதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று (30) 10 க்கும் மேற்பட்ட எரிவாயு கசிவுகள் மற்றும் விபத்துக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ளன.
எரிவாயு குறித்து ஆய்வு செய்ய ஜனாதிபதி குழுவை நியமித்தார்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள உள்நாட்டு, வர்த்தக மற்றும் விற்பனை நிலையங்களில் அண்மையில் ஏற்பட்ட எரிவாயு சிலிண்டர் தீ மற்றும் வெடிப்புக்கான காரணங்களை ஆராய்ந்து உடனடி தீர்வுகளை வழங்குவதற்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பொல தலைமையில் 8 பேரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். இந்தக் குழு நேற்று (30) நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
குழுவின் ஏனைய உறுப்பினர்களான மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஜித் டி சில்வா, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டபிள்யூ.டி. ஜயதிலக்க, இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் பிரதீப் ஜயவீர, பேராசிரியர் நாராயண் சிறிமுத்து, மேலதிக பணிப்பாளர் கைத்தொழில் தொழிநுட்ப நிறுவகத்தின் இணைப் பணிப்பாளர் சோமிரில், நியமங்கள் நிறுவனத்தின் சிரேஷ்ட பிரதிப் பணிப்பாளர் சுஜீவ மஹகம மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அனைத்து தரப்பினரின் கருத்துக்கள், தற்போதைய ஆய்வுகள் மற்றும் பல்வேறு கருத்துக்களை ஆராய்ந்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை ஒன்றை தமக்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.