வியட்நாம் நாட்டில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 18 பேர் காணாமல் போய் உள்ளனர் என கூறப்படுகிறது.
வியட்நாம் நாட்டின் மத்திய பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி அந்நாட்டு மக்கள்பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகள் முழுவதும் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகள் முற்றிலும் அழிந்து போயுள்ளன.
இதேபோன்று தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளூர் சாலைகள் பகுதியளவு பாதிப்படைந்து உள்ளன. போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதியிலிருந்து மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த வெள்ளத்தில் 18 பேர் மாயமாகி உள்ளனர். இவர்களில் பலர் இறந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இதுவரை பெய்துள்ள மழையில் 780 ஹெக்டர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. எனினும் காபி தோட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி எதுவும் வெளியிடப்படவில்லை.
கடந்த ஆண்டு புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 378 பேர் பலியானார்கள்.