இந்திய முப்படைகளின் தளபதியும் முன்னாள் ராணுவ தளபதியுமான பிபின் ராவத் சென்ற விமானப்படை விமானம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இன்று காலை விழுந்து நொறுங்கியுள்ளது.
இந்த நிகழ்வு குறித்த 10 சமீபத்திய தகவல்கள் இங்கே.
நீலகிரி மாவட்டம் வெலிங்கடன் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டவர்கள் பயணித்துள்ளனர். இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் உயிரிழந்தனர்.
இன்று காலை 11.00 - 11.30 மணியளவில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. இந்த ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
க்ரூப் கேப்டன் வருண் சிங் எனும் விமானப்படை அதிகாரி இப்போது வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த ஹெலிகாப்டர் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்கடன் ராணுவ பயிற்சி மையத்துக்கு சென்றபோது குன்னூர் காட்டேரி பார்க் அருகே விழுந்து நொறுங்கியுள்ளது.
வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு படைகளின் ஊழியர்களுக்கான கல்லூரியில் நடக்க இருந்த ஒரு நிகழ்வுக்காக பிபின் ராவத் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.
பிபின் ராவத் பயணித்த IAF Mi-17V5 ஹெலிகாப்டர் விமானம் விபத்துக்குள்ளானதை இந்திய விமானப் படை இன்று மதியம் உறுதி செய்தது. அவர் உயிரிழந்த செய்தி மாலை 6 மணியளவில் அறிவிக்கப்பட்டது.
விமானம் விழுந்து நொறுங்கிய இடம் வெலிங்டனில் இருந்து சுமார் 3.85 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
பிபின் ராவத் மற்றும் பிறரின் மரணத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்து பற்றி நாடாளுமன்றத்தில் நாளை அரசு அறிக்கை அளிக்க இருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் டெல்லி இல்லத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றார். சில நிமிடங்களில் அவர் அங்கிருந்து கிளம்பினார். அவர் சென்று திரும்பிய சுமார் ஒரு மணிநேரம் களைத்து பிபின் ராவத்தின் மரணச் செய்தி வெளியானது