இந்தியாவின் 13 ஆவது திருத்தச் சட்டத்தால் தமிழ் மக்களுக்கு ஒன்றுமே கிடைக்கப்போவதில்லை, அது பயனற்றது என முன்னாள் அரசியல் கைதி செல்வநாயகம் அரவிந்தன் (Selvanayagam Aravind) தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழ் கட்சிகள் 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து பேசுவது தொடர்பாக இன்று (16) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
13 ஆவது திருத்தச் சட்டம் என்பது தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் பயனற்ற ஒரு திருத்தச் சட்டம். அது தமிழ் மக்களின் விரும்பமின்றி இந்தியாவால் வலிந்து தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டது. அது இலங்கை அரசாங்கம் மீதும் வலிந்து திணிக்கப்பட்ட ஒரு சட்டமாகவே காணப்படுகின்றது. ஆகவே இந்தியாவின் வற்புறுத்தலின் பேரில் தான் அது கொண்டு வரப்பட்டது.
30 வருட காலம் நாம் எதற்காக யுத்தம் செய்தோம். விடுதலைப் புலிகள் அமைப்பு இந்த 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக நிராகரித்து இருந்தார்கள். காரணம் தமிழ் மக்களுக்கான தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்தில் எதுவே கிடையாது.
குறைந்த பட்ச தீர்வாக கூட உப்புச்சப்புள்ள எந்த விடயமும் இல்லை. அதில் நல்ல விடயங்கள் இருக்கின்றது. அதில் இருந்து முன்னேறி செல்லலாம் என சிலர் சொல்வது தவறு.
அந்த நேரம் வடக்கு - கிழக்கு இணைந்த மகாண சபை தலைவராக அப்போது வரதாராஜப் பெருமாள் இருந்தார். அவரே அதனை எறிந்து விட்டு சென்றார். அவருடன் வேணும் என்றால் அது பற்றி விவாதித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இணைந்த வடக்கு - கிழக்கை சட்ட ரீதியாகவே பிரித்துள்ளார்கள். அதனை ஜேவிபி செய்திருந்தது. இப்படி பல பல விடயங்கள் இருக்கின்றது.
பொலிஸ், காணி அதிகாரங்கள் தொடர்பில் யுத்தம் மற்றும் யுத்தத்திற்கு பின்னரான காலம் என 40 வருடத்திற்கு மேல் ஆகியும் எதுவுமே நடைமுறைக்கு வரவில்லை. தமிழ் மக்களுக்கான எந்த விடயமும் இந்த 13வது திருத்தச் சட்டத்தால் கிடைக்கவில்லை. நடைமுறையில் இல்லாத ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு திருப்பி திருப்பி சிலர் கோருகின்றார்கள்.
தனி நாடு கேட்ட நாங்கள் 13 வது திருத்தச் சட்டத்தை கோரி அதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்தியா தனது இராஜதந்திர வெற்றியை பெற்றுள்ளது.
அனைத்து அரசியல் தலைவர்களுமே ஒன்றுபடுத்திய நிலையில் அதனை கோர வைத்துள்ள நிலையில் இந்தியா ராஜதந்திர வெற்றியை பெற்றுள்ளது.
விடுதலைப் புலிகளை அழித்ததன் ஊடாக இந்த வெற்றியை இந்தியா பெற்றுள்ளது. இந்தியாவினுடைய அரசியல் நலனுக்காக, அவர்களுடைய இராணுவ இயந்திரத்திற்காக, அவர்களுடைய பொருளாதாரத்திற்காக, அவர்களது கேந்திர முக்கியத்துவதிற்காக 13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருக்கிறது.
தமிழ் தலைவர்களும் இதற்காக, ஒன்றுபடுபவர்களும் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்தியாவிற்கு பின்னால் வால் பிடிப்பதால் ஒன்றுமே நடக்கப் போவதில்லை.
இன்றும் இந்தியாவில் உள்ள எமது நாட்டு அகதிகள் சுதந்திரமாக வாழ முடியாத அளவு இருகின்றார்கள்.
இந்தியாவால் தீர்க்கப்படக் கூடிய அதிகாரங்களை கொண்டிருந்தும் எதனையும் தீர்த்து வைக்கவில்லை. திரும்பவும் எம்மை பகடைக்காயகாக பயன்படுத்துன்கிறது.
எனவே அதனை புரிந்து கொள்ள வேண்டும். பூகோள அரசியலை புரிந்து கொள்ளாததால் தான் விடுதலைப்புலிகள் அழிந்து போனார்கள் என்று சொல்லும் அத்தனை பேரும் தற்போது சொல்லும் விடயம் பூகோள அரசியலை உணர்ந்து கொள்ளுங்கள்.
சீனாவில் இருந்து இலங்கை விலகிப் போவதற்கான எந்த வழியும் இல்லை. சீனாவினுடைய முற்று முழுதான ஆட்சி அதிகாரத்திற்கு கீழ் இலங்கை வரும். சீனாவை விட்டு விலக சிங்கள மக்கள் தயாராக இல்லை. யார் தலைகீழாக நின்றாலும் இதனை தடுக்க முடியாது.
எனவே தமிழ் தலைமைகளும் சீனாவுடன் நட்புறவை பேணுங்கள். சீனாவின் அழுத்தங்களால் தமிழ் மக்களுக்கு ஆக வேண்டியதை செய்யுங்கள். சீனாவின் அரசியல் அழுத்தம் மூலம் தமிழ் மக்களுக்கு ஏதாவது கிடைக்கலாம். இல்லாது போனால் தமிழ் மக்கள் இன்னும் பல வருடங்களுக்கு அரசியல் அநாதைகளாக இருக்க வேண்டி வரும் என தெரிவித்துள்ளார்.