அரசாங்கம் யுகதனவி உடன்படிக்கையை அடிப்படையாக கொண்டு கூட்டு பொறுப்பை மீறியதாக பேசுவதை விட அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய பொறுப்புறுதியை மீறியமை சம்பந்தமாக தேடி ஆராய வேண்டும் என ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க (Vidura Wickramanayaka) தெரிவித்துள்ளார்.
சௌபாக்கிய நோக்கில் எந்த இடத்திலும் பொது வளங்கள் விற்பனை செய்யப்படும் என நாட்டுக்கு கூறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஹொரணையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே ராஜாங்க அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
சௌபாக்கிய நோக்கில் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் மிக்க இடங்கள் விற்பனை செய்யப்படும் எனக் கூறப்பட்டிருக்கவில்லை.
அத்துடன் வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்டவற்றை மீண்டும் திரும்ப பெறுவோம் என நாம் மேடைகளில் கூறினோம். இதனால், நாம் நாட்டுக்கும் மக்களுக்குமே பொறுப்புக் கூறவேண்டும். எனவும் விதுர விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அண்மையில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் விமல் வீரவங்ச, யுகதனவி உடன்படிக்கை பற்றி அமைச்சரவையில் பேசப்படவில்லை என்பதால், அது தொடர்பில் கூட்டுப் பொறுப்பு எதுவும் மீறப்படவில்லை எனக் கூறியிருந்தார்.