தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராடுவேன்,அதுவரை அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை என மூத்த தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் உறுதியளித்துள்ளார்.
“தமிழ் மக்களுக்கு அமைதியும் சுதந்திரமும் கிடைக்கும் வரை நான் அரசியலை விட்டு விலக மாட்டேன். மூன்று தடவை செல்வநாயகம் என்னை அரசியலுக்கு வருமாறு அழைத்தபோது நான் வேண்டாம் என்று சொன்னேன். பின்னர் எனது உறவினர்களின் அழுத்தத்தால் அரசியலுக்கு வந்தேன். அரசியலில் உள்ள சலுகைகளை அனுபவிப்பதற்காக நான் எனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவில்லை” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை மறுத்துள்ளார்.
நான்கு தசாப்தங்களுக்கு மேலாக ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கத்துடனும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காகப் போராடிய இராஜோதயம் சம்பந்தன் தற்போது மிக மூத்த நாடாளுமன்ற உறுப்பினராகக் கருதப்படுகிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் இந்திய விஜயம் பிற்போடப்பட்டமை தொடர்பிலும் சம்பந்தன் கருத்து தெரிவித்தார்.
"இந்தியாவில் இருந்து எங்களுக்கு ஒரு முறையற்ற நேரத்தில் அழைப்பு வந்தது. அதனால் அந்தப் பயணத்தை தொடர முடியவில்லை. மறுபுறம்,கூட்டணியின் சில தலைவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. இந்தியத் தலைவர்களுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்புகளைப் பேணி வருகிறோம். விரைவில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவோம்,'' என்றார்.
இந்திய அரசு டிசம்பர் 7-ம் திகதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவித்திருந்தது. வரவு செலவுத் திட்ட விவாதத்தால் சுமந்திரனுக்கு கலந்து கொள்ள முடியாமல் போனது மற்றும் தமிழ் அரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவின் குடும்ப விவகாரம் காரணமாக இந்திய விஜயத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்திருந்தார்.