மலையகத்தின் இருவேறு பகுதிகளில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இன்று இருவர் உயிரிழந்துள்ளனர்.நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெப்லோ பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 67 வயதான வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டின் அருகிலிருந்த வர்த்தக நிலையமொன்றுக்கு சென்று திரும்புகையில், மரமொன்றிலிருந்த குளவிக்கூடு கலைந்து அவர் மீது தாக்கியுள்ளது.
பலத்த காயங்களுக்குள்ளான குறித்த நபர், வட்டவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, கேகாலை – புசல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொக்சைல்ட் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.
வேலை செய்துவிட்டு வீடு திரும்பும் வழியில் 54 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இந்த சம்பவம் இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சடலம் புசல்லாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.