புத்தளம் - கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி, குரக்கான்சேனையில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்ததில், வீடும், வீட்டுடன் இருந்த சிறிய வர்த்தக நிலையமொன்றும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
மூன்று பிள்ளைகளுடன் தனிமையில் வாழ்ந்து வரும் தாய், இன்று அதிகாலையில் தனது பேரப்பிள்ளைக்கு தேநீர் தயாரிக்க தண்ணீரை கொதிக்க வைக்க காஸ் அடுப்பைப் பற்ற வைத்துள்ளார்.
இதன்போது, காஸ் அடுப்பு திடீரென பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியதால், வீடும் தீப்பற்ற ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து, உறங்கிக்கொண்டிருந்தவர்களை தட்டி எழுப்பிய தாய், வீடு முழுவதும் பரவிக்கொண்டிருந்த தீயை அணைப்பதற்கு அயலவர்களின் உதவியை நாடியுள்ளார்.
எனினும் , வீடு தகரத்தினாலும், பலகையினாலும் கொண்ட வீடு என்பதால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. வீடு முழுமையாக தீயில் எரிந்துள்ளதுடன் வீட்டில் இருந்த இருவருக்கு சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் சில்லறைக் கடையுடன் கொண்ட குறித்த வீட்டில் இருந்த அனைத்து ஆவணங்களும், பொருட்களும், ஆடைகளும் இந்த தீயினால் முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக வீட்டு உரிமையாளர் கூறியுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.