1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

"நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்குப் பதிலாக உப பிரதேச செயலக காரியாலயங்களைத் திறப்பதற்கு இடமளித்தமை, அரசில் உள்ள மலையக பிரதிநிதிகளின் இன்னுமொரு இயலாமையின் வெளிப்பாடே" என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

மலையக மக்களின் அரசியல் மற்றும் நிர்வாக அதிகார பகிர்வு தொடர்பாக அதிகம் பேச வேண்டிய, அதிகம் அக்கறை காட்டவேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம்.

இவ்வாறான சூழ்நிலையில், நுவரெலியா மாவட்டத்தில், புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்குப் பதிலாக உப பிரதேச செயலக காரியாலயங்களைத் திறப்பதற்கு இடமளித்தமை, அரசில் உள்ள மலையக பிரதிநிதிகளின் இன்னுமொரு இயலாமையின் வெளிப்பாடே ஆகும்.

கடந்த நல்லாட்சியில், தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக மக்களின் தேங்கிக்கிடந்த அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் முனைப்புடன் செயற்பட்டது.

அதன் போது, அரசியல் அதிகார பகிர்வு, அரச நிர்வாக அதிகார பகிர்வு இரண்டையும் சமநிலையாகப் பெற்றுக்கொடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இலங்கையின் மிகப்பெரிய இரண்டு பிரதேச சபைகளாக இருந்த நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளை, நுவரெலியா, அக்கரப்பத்தனை, கொட்டகளை, அம்பகமுவ, மஸ்கெலியா மற்றும் நோர்வுட் என 6 பிரதேச சபைகளாகத் தரம் உயர்த்தினோம்.

அதன் மூலம் மலையக மக்களின் நீண்டகால அபிலாஷையாக இருந்த, அரசியல் அதிகார பகிர்வை நாம் பெற்றுக்கொடுத்தோம். அதனைத் தொடர்ந்து, அரச நிர்வாக அதிகார பகிர்வாகப் பிரதேச செயலகங்களை அதிகரிப்பதற்கான முடிவுகள் எட்டப்பட்டது.

அதற்கான அரச வர்த்தமானியும் வெளியிடப்பட்டது. அதன் மூலம் நுவரெலியா மாவட்டத்திலிருந்த 5 பிரதேச செயலக பிரிவுகளை 10 பிரதேச செயலக பிரிவுகளாக அதிகரிப்பதற்கு வர்த்தமானி வெளியிடப்பட்டது.

அதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 2019 ஆட்சி மாற்றத்தின் பின், கடந்த இரு வருட காலத்தில், புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்றைய அரசாங்கத்தின் இரண்டு பாதீடுகள் முன்வைக்கப்பட்டுவிட்டது.

எனினும் அரச தரப்பில் உள்ளவர்கள், புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கு அவசியமான நிதியையும் ஏனைய வளங்களையும் பெற்றுக்கொள்வதற்குரிய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று, புதிய பிரதேச செயலகம் தொடர்பாக சமூகத்தில் கேள்விகள் எழத் தொடங்கிவிட்டது.

இதனை மூடி மறைப்பதற்காக, இன்று தலவாக்கலையில் உப பிரதேச செயலக காரியாலயம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய பிரதேச செயலகமொன்று உருவாக்கப்படுவது தடுக்கப்பட்டிருக்கின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்களின் தசாப்தகால பிரச்சினையாக இப்பிரச்சினை உள்ளது. இதனைத் தீர்ப்பதற்குப் பதிலாக இன்னும் பல தசாப்தங்களுக்கு இழுபறி நிலைக்குத் தள்ளும் செயற்பாடே இவ் உப பிரதேச செயலக காரியாலயம் ஆகும்.

தமிழ் முற்போக்கு கூட்டணி கடந்த அரசாங்கத்தில் புதிய பிரதேச செயலக பிரிவுகளை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. அதன் படி அரச வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது. அதனை, தற்போது அரசாங்கத்தில் உள்ளவர்கள், அழுத்தம் கொடுத்து, நடைமுறைப்படுத்துவது மட்டுமே உள்ளது.

அதைக் கூடச் செய்ய அரசாங்கத்தில் உள்ள மலையக பிரதிநிதிகளுக்கு இயலுமை இல்லையா? அல்லது, அவர்களின் வழமையான அசமந்த போக்கா இந்நிலைக்குக் காரணம்? அல்லது வழமைபோல மக்கள் பிரச்சினையை இழுத்தடிப்பு செய்து அரசியல் லாபம் ஈட்டும் இன்னுமாறு நடவடிக்கையா? என்பதையே நாம் மக்கள் முன் கேள்வியாக முன்வைக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி