நாம் தான் சிறப்பாக செய்தோம், எனக்கு தான் அனைத்தும் தெரியும் என கூறி அனைத்தையும் நாசம் செய்துவிட்டனர் எனவும் இந்த உணவு தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு 100 வீதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தான் காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ் விடயம் குறித்து இன்று (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
நேற்று ஜனவரி முதலாம் திகதி எனது பகுதியில் முழு நாளும் எரிவாயு சிலிண்டர்களுக்காக வரிசைகள் காணப்பட்டது. அரிசி 1kg 160 ருபாய் , நெத்தலி 850 ரூபா , 500 விற்கு குறைந்த எந்தவொரு மரக்கறி வகைகளும் இல்லை. பச்சை மிளகாய் ஒரு கிலோ 1200 ரூபா , முதல் தடவையாக ஒரு செய்தி எனக்கு கிடைக்க பெற்றது தம்புள்ளையில் பச்சை மிளகாய் மூட்டை ஒன்று களவெடுத்து செல்லப்பட்டுள்ளது. அந்த காட்சி CCTV கமராவில் பதிவாகியுள்ளது.
மஞ்சள் விலை 4200 ரூபா, மக்களுக்கு வாழ முடியாத நிலை. இதுதான் உண்மை கதை. பாண் ஒரு இறாத்தலின் விலை என்ன! நினைத்த விலைகளுக்கு பாண் விற்பனை செய்யப்படுகின்றது. சீனி ஒரு கிலோ 150 , பருப்பு ஒரு கிலோ 300 ரூபா வரை விற்கப்படுகின்றது. செமன் டின் ஒன்றின் விலை 375, மீன் வகைகளை சாப்பிட நினைக்கவும் முடியாது அனைத்துமே 2000 இற்கு மேல். கோழி இறைச்சி 800 இற்கும் மேல், முட்டை ஒன்று 40 ரூபா, மீண்டும் அரிசி விலைகளை அதிகரிக்க தீர்மானித்து வருகின்றனர்.
இந்த 2022 ஆம் ஆண்டில் பாரிய அழிவொன்று ஏற்படப்போகிறது. விவசாய பிரச்சினைக்கு ஓமிக்ரோன், டெல்டா என்பவை காரணம் அல்ல.கொவிட் தொற்று பரவ ஆரம்பித்த காலத்தில் இருந்து அத்தியாவசிய சேவைகளாக அரிசி ஆலைகள் செயற்ப்பட்டன. விவசாயிகளும் அவர்களுடைய வேலைகளை பார்த்தார்கள்,அவர்கள் வீட்டில் இருக்கவில்லை .
ஜனாதிபதி அவர்களே, மக்கள் உண்பதற்கு வழியில்லாமல் உள்ளார்கள். ஒரு சில பகுதிகளில் மக்கள் ஒரு வேளை உணவை மாத்திரமே உட்கொள்கின்றனர். மக்களின் நிலைமையை சென்று பாருங்கள் ஜனாதிபதி அவர்களே என்று கோரிக்கை விடுத்துள்ளார்.