நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் ஊழலால் விழுங்கப்பட்டு வருகின்றன எனவே நாட்டில் ஊழலை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
திருட்டு, ஊழல், இலஞ்சம் இன்று நாட்டில் தலைவிரித்தாடுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதனை கட்டுப்படுத்துவதற்கு சமகி ஜன பலவேகய நிபந்தனையற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
சக்வல திட்டம் சாம்பல்தீவு தமிழ் வித்தியாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதன் பின்னர் நடைபெற்ற வைபவத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நவீனத்துவக் கருத்தாக நவீன தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த பிள்ளைகளுக்கு டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணனிகளை அன்பளிப்பு செய்யும் முன்னோடித் திட்டமான 'சக்வல'(பிரபஞ்சம்) இரண்டாம் கட்டம் நேற்று (04) ஆரம்பமானது.
திருகோணமலை நிலாவெளி சாம்பல்தீவு தமிழ் மகா வித்தியாலயத்திற்கு நேற்று (04) 750,000 ரூபா பெறுமதியான வகுப்பறைக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணனி உபகரணங்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தாக செயற்படும் 'சக்வல' (பிரபஞ்சம்) திட்டம் நாட்டின் கஸ்டப் பிரதேச பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் நவீன தொழில்நுட்ப அறிவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.