வட, கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு தமிழ்த் தேசத்தை அங்கிகரிக்கும் முகமாக இந்தியா தனது அரசியல் நடவடிக்கையை எடுக்கவேண்டும். இல்லை என்றால் புரட்சி வெடிக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு அரசடி பிள்ளையார் வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட காரியலயத்தில் நேற்று இடம்பெற்ற அமரர் மாமனிதர் குமார் பொன்னம்பலம் 22ஆவது நினைவேந்தல் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் உரையாற்றிய போது சுரேஷ் இவ்வாறு தெரிவித்தார்.
சுரேஷ் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “இங்கே சீனா கால் ஊன்றி இருக்கின்றது சீனாவைத் தடுக்கும் முகமாக இந்தியா தங்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு பல கூட்டுக்களையும் பல அரசியல் தலைவர்களையும் தங்களுக்கு ஏற்ற மாதிரி பாவித்து ஒட்டு மொத்த தமிழ் மக்களின் நலனை பாதிக்கின்ற வகையில் அவர்கள் செயற்படுகின்றார்கள்.
எனவே நீங்கள் உங்களுடைய முகவர்களை பாவித்து பல கூட்டுக்களையும் பல ஒப்பந்தங்களையும் செய்து அதன் மூலம் மக்களை ஏமாற்றுகின்ற பகற்கனவை நீங்கள் உடனடியாக நிறுத்தவேண்டும்.
எங்களுடைய மக்களின் நியாயமான போராட்டத்தை கருத்தில் கொள்ளாவிட்டால் நிச்சயமாக உங்களுடைய நாட்டிற்கு சீனா அல்ல தெற்காசியாவிலுள்ள பல நாடுகள் உங்களை குறிவைக்கும்.
இந்த நாடு உண்மையிலே சீனாவின் கடன் எல்லைக்குள் அகப்பட்டிருக்கின்றது சீனா வடக்கு கிழக்கில் கால் ஊன்ற எத்தனிக்கின்றது. நாங்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல இந்தியாவின் செல்ல பிள்ளைகளாக நாங்கள் யோசிக்கின்றோம் ஆனால் நீங்கள் அவ்வாறு இல்லை நீங்கள் எங்களை பகடைக்காயாகவும் அடிமைகளாகவும் பாவிக்க எத்தனிக்கின்றீர்கள்” எனக் கூறினார்.