தலைநகர் கொழும்பில் இருந்து வடக்கில் காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் பயணிகளுக்காக சகல வசதிகளுடன் கூடிய சொகுசு புகையிரதம் நேற்று (09) ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதன் முதல் பயணம் நேற்று காலை 5.10 மணிக்கு கல்கிசை புகையிரத நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை சென்டைந்தது.
இந்த புகையிரதம் தினமும் காலை 5.10 மணிக்கு கல்கிசை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்டு அன்றைய தினம் மதியம் 12.17 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை சென்றடையும். காங்கேசன்துற புகையிரத நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.25 மணிக்கு கல்கிசை புகையிரத நிலையத்தை சென்றடையும்.
நவீன தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ரயிலில் 10 பெட்டிகள் மற்றும் சக்தி வாய்ந்த 02 எஞ்ஜின்கள் உள்ளன, இவை அனைத்தும் குளிரூட்டப்பட்டவை.
மேலும், இந்த புகையிரத பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. வசதியான இருக்கைகள், உணவு உண்பதற்கான அறை தொலைக்காட்சி சேவை மற்றும் நவீன கழிப்பறை வசதிகள் ஆகியவை இதில் அடங்கும்.
இந்த புகையிரத சேவைகளைப் பெற விரும்பும் பயணிகள் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே ஒன்லைனில் இ-டிக்கெட்டுகளை வாங்க முடியும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட இந்த புகையிரதத்தின் பெறுமதி 2500 மில்லியன் ரூபாவாகும். இந்த புகையிரதத்தை பாதுகாக்க புகையிரத திணைக்களம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
இந்த புகையிரத சேவையின் ஆரம்ப சேவை போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் கல்கிசை புகையிரத நிலையத்தில் இடம்பெற்றது. அதன் பின்னர் கல்கிசை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலயைத்தை சென்றடைந்தது இதில் அமைச்சருடன், புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர மற்றும் அதிகாரிகள் குழுவுடன் சென்றிருந்தனர்.