தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலைப் பொங்கல் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெற்றுள்ளது.
பல வருடங்களுக்கு மேலாக அரசியல் கைதிகளாகச் சிறைகளிலே இருந்து வருகின்ற அரசியல் கைதிகளைப் பொங்கல் தினத்தில் அல்லது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் ஜனாதிபதி விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துக் குறித்த விடுதலைப் பொங்கல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
அரசியல் கைதிகளாக இருந்து விடுதலை பெற்ற குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் கோமகன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் பொங்கல் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகள் சிலரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரசியல் கைதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கலந்து கொண்டனர்.
அத்தோடு யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் யாழ்ப்பாண மாநகர பிரதி முதல்வர் து.ஈசன், சிவகுரு ஆதீன குரு முதல்வர் வேலன் சுவாமிகள், யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.