பன்னிரெண்டு வருடங்களுக்கு மேலாக பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் வடக்கில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு தெளிவான பதிலை வழங்குவதில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் தோல்வியடைந்துள்ளார்.
யுத்தத்தின் போது பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி வடக்கில் தாய்மார்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவரின் தீர்வு என்ன என ஊடகவியலாளர்கள் வன்னியில் சஜித் பிரேமதாசவிடம் கேட்டிருந்தனர்.
அனைத்து போர்க்கால நடவடிக்கைகளுக்கும் "முடிவு" இருக்க வேண்டும் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் ஒப்புக்கொள்கிறார். அந்த முடிவை உருவாக்க ஒரு 'முறைமை' தேவை என அவர் வலியுறுத்துகிறார்.
"குறிப்பாக மக்களின் நல்லிணக்கத்தின் மூலம், குடும்பத்தை இழந்தவர்களின் குறைகள், கண்ணீர், வலிகள் மற்றும் துக்கங்களை நிவர்த்தி செய்யும் திட்டத்தை நாங்கள் மீண்டும் தொடங்குவோம் அதற்காக அபிவிருத்தி, நலத்திட்டங்கள் தேவை."
எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான முயற்சியாகவே தற்போது வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மைத்திரி ரணில் ஆட்சியில் வீடமைப்பு, நிர்மாண மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக பதவி வகித்தவரும் இப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச முல்லைத்தீவு ஊடகவியலாளர் சங்கத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு கருத்துதெரிவித்தார்.
எவ்வாறாயினும், அதிகாரம் மிக்க பதவிகளை வகித்த அரசாங்கத்தினால் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு முடிவு காண பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விரிவாகக் கூறவில்லை.
வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்கக் கோரி வடக்கில் நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டுவந்த 108 பெற்றோர்கள் பிள்ளைகளின் கதி என்னவென்று தெரியாமல் தமது வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளதாக மாகாண ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வழங்கிய பதிலை கீழே உள்ள காணொளியில் பாருங்கள்.