இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில், சட்டவாட்சி, ஜனநாயகம் மற்றும் மக்களின் வாழ்வியலில் ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பில் தாம் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் மேலும் தாமதமடையாமல், பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ரஜீவ் அமரசூரிய விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்க அதிகரிப்பு, சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, கையிருப்பு தட்டுப்பாடு, வௌிநாட்டவர்களுக்கு பணம் அனுப்ப முடியாமை, கடன் தரப்படுத்தலில் இலங்கை பின்தள்ளப்பட்டமை, சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை, சில விமான நிலையங்களுக்கான நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதாக வௌியாகும் தகவல்கள் மற்றும் மின்சார நெருக்கடியினால் ஏற்பட முடியுமான பாதிப்புகளினால் இந்த அவசர தேவை உணரப்படுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தின் இவ்வாறான பின்னடைவு பெரும்பாலும் நாட்டின் சட்டவாட்சிக்கும் நிர்வாகத்திற்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் வௌிநாட்டு கையிருப்பு மூன்று பில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ள போதிலும் அதில் எவ்வளவு தொகையை பயன்படுத்த முடியும் என்பதனை ஆராய வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோய் நிலைமையினால் அரசாங்கம் சவால்களை எதிர்நோக்கியுள்ளது என்பதனை ஏற்றுக்கொள்வதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த சவால்களுக்கு முகங்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு நிலையான தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான தொழில்நுட்ப விசேட நிபுணத்துவம் பெற்ற உள்நாட்டு, சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன மற்றும் பக்கசார்பற்ற நிபுணர்கள், நிறுவனங்களின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.