கிளிநொச்சி பளைப் பிரதேச பொது வைத்தியசாலையில் போதிய வைத்தியர்கள் மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறை காரணமாக தொடர்ந்து பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் அமைந்துள்ள பளை பிரதேச வைத்தியசாலையில் தொடர்ந்து வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதுடன் பௌதிக வளப் பற்றாக்குறையும் காணப்படுகின்றது. அதுமட்டுமின்றி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட கட்டுமான வேலைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் இங்கு சிகிச்சை பெறச் செல்லும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஏ-9வீதியில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கான வைத்தியர்கள் ஏனைய ஆளனி வளங்கள் பூர்த்தி செய்யப்படாமையினால் பல்வேறு நெருக்கடி நிலைமைகள் காணப்படுவதாகவும் பிரதேச மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
ஏ- 09 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிரதான வைத்தியசாலைகளின் ஒன்றாகக் காணப்படுகின்ற இவ்வைத்தியசாலை வசதி குறைபாடுகளுடன் காணப்படுவதனால் வீதி விபத்துகளில் காயமடைந்தவர்களை பளை வைத்தியசாலையிலிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அல்லது யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுகின்ற போது உயிரிழப்பு கூட ஏற்படும் அபாய நிலை காணப்படுகின்றது. எனவே வைத்தியசாலையின் தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு பிரதேச மக்களும் பொது அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
இதேவேளை குறித்த வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட கட்டட வேலைகளும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையால் தளபாடங்கள் மற்றும் மருத்துவ வசதிகளும் குறைவாகவே காணப்படுகின்றன. பிரதேச வைத்தியசாலையானது ஒரு வைத்தியரை மாத்திரமே கொண்டு இயங்கி வருவதாகவும் மேலதிக வைத்தியரை நியமிக்குமாறும் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.