பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் லாகூர் ஐகோர்ட்டு நீதிபதி ஆயிஷா மாலிக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிப்பது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி முதன் முதலாக பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால் இந்த பரிந்துரைக்கு பாகிஸ்தான் பார் கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நீதிபதி ஆயிஷா சீனியாரிட்டி அடிப்படையில் 4-வது இடத்தில் உள்ளதால் அவரை சுப்ரீம் கோர்ட்டுக்கு முதலில் அனுப்புவது தவறு என பாகிஸ்தான் பார் கவுன்சில் கூறியது.
இந்த நிலையில் பாகிஸ்தான் நீதித்துறை ஆணையத்தின் கூட்டத்தில், நீதிபதி ஆயிஷாவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் தலைமை நீதிபதி குல்சார் அகமது அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை நீதிபதி ஆயிஷா மாலிக் பெற்றுள்ளார்.
ஆயிஷா மாலிக், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் ஆவார். 20 ஆண்டுகள் வரை லாகூர் ஐகோர்ட்டு நீதிபதியாக செயல்பட்டு வந்தார். சொத்துக் குவிப்பு வழக்கு மற்றும், விவாசாயிகள் பிரச்சனையில் சிறப்பான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.