யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேசத்தில் ஊடகவியலாளர் ஒருவர் மீது, வேனில் வந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சாவகச்சேரி கச்சாய் வீதிப் பகுதியில் மின்சாரசபையை அண்மித்த பகுதியில் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஊடகவியலாளரை இடைமறுத்த குழுவினர், தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பித்துச் சென்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
சாவகச்சேரியைச் சேர்ந்த தவராசா சுபேசன் என்ற 27வயதான ஊடகவியலாளர் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி நகரசபையில் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்ட பின்னர் கச்சாய் வீதி ஊடாக சென்ற ஊடகவியலாளரை மோதிக்காயப்படுத்தும் வகையில் வான் ஒன்று ஊடகவியலாளர் பயணித்த மோட்டார் சைக்கிளின் முன்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
.
பின்னர் வானில் இருந்தவர்களில் ஒருவர் பொல்லுகள் மற்றும் கல் ஆகியவற்றால் ஊடகவியலாளரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு வானில் ஏறித் தப்பித்துச் சென்றதாக ஊடகவியலாளர் சுபேசன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவுப் பிரதேசத்தில் அண்மையில் இரண்டு ஊடகவியலாளர்கள் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு உள்ளானமையும் நினைவூட்டத்தக்கது.
வவுனியா அபிவிருத்தி குழுக்கூட்டத்திற்கு ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு
சாவகச்சேரியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள அதேவேளை, வவுனியாவில் ஊடகவியலாளர் பணிக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மக்கள் நலன் சார்ந்து முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டமானது வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராசா மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான கு.திலீபன் ஆகியோரின் இணைத் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூட்டத்தில் நேற்று 31ஆம் திகதி நடந்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்குக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், அதன் பின் உள்ளே செய்தி சேகரிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe