இலங்கையின் மோசமான மனித உரிமைகள் அறிக்கை ஜெனீவா மனித உரிமைக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு, சிறைவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் சிலரை விடுவிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆனால் அரசியல் கைதிகள் என்ற பதத்தை அவர் மறுத்திருந்தார்.
இதற்கான அறிவிப்பை நீதியமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி அண்மையில் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
அரசியல் கைதிகள் என்று சட்டத்தின் அடிப்படையில் எவரும் இல்லையெனவும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களே உள்ளதாகவும் நீதி அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை வழங்குவது மற்றும் விடுதலை செய்வது தொடர்பாக ஜனாதிபதிக்கு பரிந்துரை வழங்குவது குறித்து ஆலோசனைக் குழுவொன்றை முன்னாள் பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தலைமையில் அமைத்துள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் குறித்த குழுவிற்கு 44 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த விண்ணப்பங்கள் ஆராயப்பட்டதன் பின்னர் 27 பேரை விடுவிப்பதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe