இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் செயற்கைக் கால் முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்திய - இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவரும் நீர்ப்பாசன அமைச்சரும், தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சரும், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ச மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரால் கம்பஹாவில் உள்ள ரணவிரு சேவா அதிகார சபை வளாகத்தில் 2022 பெப்ரவரி 02ஆம் திகதி செயற்கை கால்களை வழங்குவதற்கான முகாம் ஒன்று கூட்டாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
- ஒரு மாதத்திற்கும் அதிகமான காலம் நடைபெறவிருக்கும் இந்த முகாமின் மூலமாக நாட்டின் பல்வேறு பிராந்தியங்களிலும் பரந்து காணப்படும் சகல இலங்கை மக்களுக்கும் பல்வேறு சேவைகள் வழங்கப்படவுள்ளன.
- இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் ஆதரவளிக்கப்பட்டிருக்கும் இந்த முகாம், இந்தியாவில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமும் விசேட தேவையுடையோரின் சமூக பொருளாதார மற்றும் உடல் ரீதியான புனர்வாழ்வுக்காக செயற்படும் அமைப்புமான பகவான் மகாவீர் விக்லங் சகாயதா சமிதியால் நடத்தப்படுகின்றது. ஜெய்ப்பூரைத் தளமாகக் கொண்டியங்கும் இந்த அரச சார்பற்ற நிறுவனம் 1975 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டதுடன் செயற்கை கால்களை பொருத்துதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய உதவிகளை விசேட தேவையுடையோருக்கு வழங்கிவரும் உலகின் பாரிய அமைப்பாகவும் உள்ளது.
- 2010 மார்ச்-ஏப்ரல் காலப்பகுதியில் வவுனியாவிலும்; 2011 செப்டம்பரில் யாழ்ப்பாணத்திலும் பகவான் மகாவீர் விக்லங் சகாயதா சமிதி அமைப்பானது இரண்டு முகாம்களை நடத்தியிருந்தமை இச்சந்தர்ப்பத்தில் நினைவூட்டப்பட வேண்டிய விடயமாகும். இம்முகாம் மூலம் 2500க்கும் அதிகமானோர் நன்மை அடைந்திருந்த அதேவேளை 1600 பேர் ஜெய்ப்பூர் செயற்கை கால்களை பெற்றிருந்தார்கள்.
- இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் அசாதி கா அம்ரித் மகோற்சவ்வை முன்னிட்டு ஒரு வார கால கொண்டாட்டங்கள், 73வது குடியரசு தினமான 2022 ஜனவரி 26 ஆம் திகதி ஆரம்பித்திருக்கும் நிலையில் அதன் ஒரு பகுதியாகவே இலங்கையில் செயற்கை கால்களை பொருத்தும் முகாமின் ஆரம்ப நிகழ்வுகள் அமைந்துள்ளன. அத்துடன் இந்தியாவின் பௌத்த மரபுகள் குறித்த கண்காட்சி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ பாளி வளாகத்தில் குருதேவ் இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் சிலையைத் திறந்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இக்கொண்டாட்டங்களில் உள்ளடங்குகின்றன. இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் அதேநேரம், இலங்கை மக்களின் வாழ்வில் வெளிப்படையான தாக்கத்தினை ஏற்படுத்தும் வகையிலான இலங்கையுடனான அபிவிருத்தி பங்குடைமையில் இந்திய அரசாங்கத்தின் வழிகாட்டல் தத்துவத்தினை இந்த செயற்கைக்கால் முகாம் சான்றுபகர்கின்றது.