” இது வெத்து வேட்டு அரசு. வேலைத்திட்டங்கள் எதுவும் அற்ற வெற்று அரசு. எதற்கெடுத்தாலும் ‘சதி’….’சதி’ யென ‘சதி’ புராணம்பாடும் கோமாளி அரசு.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
நாவலப்பிட்டிய பகுதியில் இன்று இடம்பெற்ற ஆன்மீக நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டை ஆளுகின்ற இந்த அரசு வெற்று அரசாகும். அதனிடம் உரிய வேலைத்திட்டங்கள் இல்லை. இது உள்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல முழு உலகுக்குமே தெரியும். நல்லாட்சியின்போது முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு திறப்பு விழா நடத்தி அகம் மகிழ்கின்றனர்.
ஊழல் மோசடிகள் மற்றும் சதித்திட்டங்கள் ஊடாக ஆட்சிக்கு வந்த இந்த அரசு, தற்போது எதற்கெடுத்தாலும் ‘சதி’ புராணம் பாடுகின்றது. சமையல் எரிவாயு வெடித்தாலும் சதி, நாட்டில் மின்வெட்டு அமுலானாலும் சதியென காரணம்கூறுகின்றனர். மக்களை ஏமாற்றவே அவர்கள் அவ்வாறு செயற்படுகின்றனர். ஆனால் அவர்களின் நாடகத்தை நாட்டு மக்கள் தற்போது புரிந்துகொண்டுள்ளனர்.
இந்த அரசு தன்னைசூழ இராணுவத்தை வைத்துக்கொண்டுள்ளது. எனவே, சதி இடம்பெறுகின்றதெனில் அதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும். மாறாக பூச்சாண்டி அரசியல் நடத்தக்கூடாது.
அதேவேளை, நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் இன ஒற்றுமை அவசியம். ஆனால் நுவரெலியாவில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியும், கலாச்சாரமும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தேசிய நிகழ்விலும் தமிழுக்கு இடமில்லை.” – என்றார்.