ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு கடுமையான பிரேரணையைக் கொண்டு வருவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றவை எனக் கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கான பொறுப்புக் கூறலின் தாமத நிலை மற்றும் அண்மைய கால உரிமைகள் மீறல்கள் பற்றிய விடயங்கள் இந்தப் பிரேரணையில் உள்ளடக்கியதாக இருக்கும் என கொழும்பின் ராஜதந்திரத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியா கொண்டுவரவுள்ள இந்தப் புதிய பிரேரணைக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலவும் மேற்குலக நாடுகள் சிலவும் ஆதரவைத் தெரிவித்துள்ளன எனவும் அந்தத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த நிலையில், ஜெனிவாவின் நெருக்கடிகளை எதிர்கொள்ள இலங்கை அரசு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றது.
ஜெனிவா அமர்வுக்கு முன்னர் முக்கிய சில ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சு நடத்த வெளி விவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தீர்மானித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடல்களுக்குச் சில நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளி விவகார அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.
அண்மைய இந்திய விஜயத்தைப் போன்று குறிப்பிட்ட சில ஐரோப்பிய நாடுகளுக்கு ஜெனிவா அமர்வுக்கு முன்னர் விஜயம் செய்து, அல்லது மார்ச் மாதம் 3 ஆம் திகதி இலங்கை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் குறித்த நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து ஒத்துழைப்பு பெற இலங்கையின் இராஜதந்திர பணிக் குழாம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.