இலங்கை மின்சார சபைக்கு நேரடியாக எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக இந்திய அரசாங்கம் மற்றும் லங்கா IOC நிறுவனத்துடன் இரண்டு சுற்று பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும், அதன் பதிலுக்காக காத்திருப்பதாகவும் இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்தார்.
நாடு டொலர் நெறுக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை விநியோகிக்க முடியாது என வலுசக்தி அமைச்சு அறிவித்திருந்தது. இந்நிலையில் லங்கா IOC நிறுவனத்திடமிருந்து நேரடியாக எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை மேற்கொண்டது.
எனினும் எரிபொருள் இன்மையால் இலங்கை மின்சார சபைக்கு தொடர்ந்தும் எரிபொருள் விநியோகிக்க முடியாது என லங்கா IOC நிறுவனம் கடந்த மாதம் நடுப்பகுதியில் அறிவித்திருந்தது.
கடுமையான பொருளாதார நெறுக்கடியில் சிக்கித்தவிக்கும் நாட்டு மக்கள் தொடர் மின்வெட்டை சந்திக்க நேரிடுமானால் பொருளாதாரத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் மற்றொரு பேர் இடியாகும்.
இந்த நிலைமையை சமாளிக்கவே, லங்கா IOC நிறுவனத்திடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இலங்கை மின்சார சபை இறங்கியுள்ளது.
இது தொடர்பான அனைத்து கலந்துரையாடல்களும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக இடம்பெற்றதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளரும் பிரதிப் பொது முகாமையாளருமான ஏ.ஆர்.நவமணி தெரிவித்தார்.
இதனிடையே, எரிபொருள் பற்றாக்குறையினால் களனிதிஸ்ஸ மற்றும் மத்துமக மின்னுற்பத்தி நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் அன்ரூ நவமணி இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அத்தோடு நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் நீர் மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இது தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதில் சிக்கல் நிலைமை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்காரணமாக நாளாந்தம் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் நாளை செவ்வாய்க்கிழமை (15) பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை கோருவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
https://bit.ly/3uHGkH6