பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு வைத்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிலியந்தலையைச் சேர்ந்த வைத்தியர் ஷெர்லி தயானந்த ஹேரத்தை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று (14) மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்தார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
குறித்த தேவாலயத்தில் கடந்த மாதம் 12 ஆம் திகதி கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஓய்வுபெற்ற வைத்தியர் ஷெர்லி தயானந்த ஹேரத் பிலியந்தலை பகுதியில் வைத்து கடந்த மாதம் 19 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.
வைத்தியரின் தனியார் சிகிச்சை நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றி வந்த எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான சந்தேக நபர் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைக்குண்டை கொள்வனவு செய்வதற்கு தேவையான பணத்தை வைத்தியரே வழங்கியுள்ளதாக சந்தேகநபர் விசாரணைகளின் போது தெரிவித்தார்.
பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலையில் சேவையாற்றிய பின்னர் ஓய்வுபெற்ற வைத்தியர் குறித்த பகுதியில் உள்ள தனது தனியார் சிகிச்சை நிலையத்தை நடத்தி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள். https://bit.ly/3uHGkH6