தொடர்ந்து ஒன்பதாவது நாளாகவும் சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதன் காரணமாக ஆயிரக்கணக்கான நோயாளர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
தங்களின் ஏழு கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வினை பெற்றுத்தர தவறியதைக் கண்டித்து அரச சுகாதாரப் ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமை (7) காலை 7.00 மணி முதல் காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே கடந்த 11 ஆம் திகதி வைத்தியசாலை சேவைகள் மற்றும் மின் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத்தின் கையொப்பத்துடன், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
இதன்படி, மின்சார விநியோகம், வைத்தியசாலைகள், சிகிச்சையகங்கள், மருந்தகங்கள் மற்றும் அதுபோன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பரமாரிப்பு மற்றும் வரவேற்பு, உபசரிப்பு, சிகிச்சை ஆகியவை தொடர்பில் ஆற்றப்படவேண்டிய அனைத்து அவசியமான அல்லது தேவைப்படும் தேவைகள் மற்றும் பணிகள் என்பன அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
எனினும் இதனை பொருட்படுத்தாது தங்களின் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரையில், சுகாதார ஊழியர்கள் தமது போரட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன் காரணமாக சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த போராட்டத்தை உடனடியாக கைவிடுமாறு, அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்திற்கும், அதன் தலைவர் சமன் ரத்னப்பிரியவுக்கும் நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்தது.
எனினும் இவற்றை கருத்தில் கொள்ளாது தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக அபராதம் விதிக்கக்கூடிய அல்லது சிறைத் தண்டனை விதிக்கக்கூடிய இயலுமை நீதிமன்றத்திற்கு உள்ளதாக நீதி அமைச்சின் ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சுகாதார தொழிற்சங்கங்களின் தலைவர்களுக்கும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கும் இடையே முக்கிய கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் ஏழு கோரிக்கைகளில் ஆறு கோரிக்கைகளுக்கான தீர்வுகள் திருப்திகரமாக முடிவடைந்த போதிலும், உத்தரவாதம் வழங்கப்படவில்லை எனவும் கால அவகாசம் தொடர்பான கோரிக்கையும் இன்னும் தீர்க்கப்படவில்லை எனவும் சுகாதார தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
எனவே, சுகாதார அமைச்சகத்திடம் இருந்து இன்னும் விரிவான பதில் கிடைக்காததால், வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர முடிவு செய்ததாக அவர் கூறினார்.
“எவ்வாறாயினும், இன்று (15) காலை 9.00 மணிக்கு சுகாதார வல்லுநர்கள் கூட்டமைப்பின் செயற்குழு கூடவுள்ளது, அங்கு வேலைநிறுத்தத்தை தொடர்வதா இல்லையா என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும்” என்று குமுதேஷ் மேலும் கூறினார்.
இதேவேளை, தமது குறைகளை நிவர்த்தி செய்யுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தி நேற்று அதிகளவான சுகாதார ஊழியர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பேரணியாக சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள். https://bit.ly/3uHGkH6