இலங்கையின் மனித உரிமைகள் சட்டத்தரணி அம்பிகா சத்குணநாதனின் கருத்துக்களை விமர்சித்து வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கைக்கு, என மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட எட்டு மனித உரிமைக் குழுக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன.
இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து சத்குணநாதன் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பேசியிருந்தார். இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை துன்புறுத்தலுக்கும் அச்சுறுத்தலுக்கும் சமமானது என குறித்த எட்டு மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன. “அரசாங்க அறிக்கை, துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் போன்ற செயலை தெளிவாகக் கொண்டுள்ளது.
மனித உரிமைப் பாதுகாவலர்களை அச்சுறுத்தும் இலங்கை அரசாங்கத்தின் தந்திரோபாயங்களை நாங்கள் கண்டிக்கிறோம்” என குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் நன்கு அறியப்பட்ட, மரியாதைக்குரிய மற்றும் தைரியமான மனித உரிமைப் பாதுகாவலரான சத்குணநாதனுக்கு தமது முழு ஒத்துழைப்பை வெளிப்படுத்துவதோடு, ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து துல்லியமான சாட்சியத்தை வழங்கியதற்காக அவரை இலக்கு வைப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே நிர்ப்பந்தத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து இலங்கை சிவில் சமூகத்திற்கும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளவர்களுக்கும் இந்த அறிக்கை ஊடாக தற்போதைய அரசாங்கம் ஒரு எச்சரிக்கையை விடுப்பதாக உள்ளது என எட்டு மனித உரிமைகள் குழுக்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்னெஸ்டி இன்டர்நேஷனல், மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டுக்கான ஆசிய மன்றம் (FORUM-ASIA), FIDH, முன்னணி வரிசை பாதுகாவலர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நீதிபதிகள் ஆணையம், அனைத்து வகையான பாகுபாடு மற்றும் இனவெறிக்கு எதிரான சர்வதேச இயக்கம் (IMADR) மற்றும் சித்திரவதைக்கு எதிரான உலக அமைப்பு (OMCT ) உள்ளிட்டவை இந்த கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள். https://bit.ly/3uHGkH6