உள்ளூர் ஊடகங்களுக்கு ஒரு கறுப்பு சகாப்தம் உதயமாவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன கூறியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்கள் துன்புறுத்தல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வுகளில் இலங்கை சில கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீடு மீதான தாக்குதல் மற்றும் சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்கவின் கைது தொடர்பிலும் அடுத்த ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கு பதிலளிக்க இலங்கை தயாராக வேண்டும் எனவும் விஜேவர்தன எச்சரித்துள்ளார்.
சமுதித சமரவிக்ரம தொடர்பான சம்பவங்கள் மற்றும் ஷெஹான் மாலக்க கைது செய்யப்பட்டதன் மூலம் இலங்கை ஜனநாயகம் இல்லாத நாடாக சர்வதேசத்தில் அறியப்படும். இவ்வாறானதொரு சமிக்ஞை உலகம் முழுவதும் பரவல் அடையும் போது எந்தவொரு முதலீட்டாளர்களும் நாட்டுக்கு வரமாட்டார்கள். அத்தோடு எந்த ஒரு நாடும் இலங்கைக்கு உதவ வராது.
அந்நிய செலாவணி சிக்கலைத் தீர்க்க எங்களுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் பிற நாடுகளின் உதவிகள் எப்போதும் தேவை,” என்று அவர் மேலும் கூறினார். "மக்களின் உரிமைகளை மீற வேண்டாம் என்று பொலிஸாரிடமும் மற்றும் அரச ஊழியர்களிடமும் நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம்.
அவ்வாறு செயற்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், பொலிஸாரும் அரச ஊழியர்களும்தான் சிரமப்படுவார்கள்,'' என்றார். எனவே கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதோடு இந்த நோக்கத்தில் தமது கட்சி அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் விஜேவர்தன மேலும் தெரிவித்தார்.