விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தேசிய மட்டத்தில் அரசியல் பிரச்சாரத்தை அலரிமாளிகையில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பூரண ஆசீர்வாதத்துடன் அனைத்து இராஜாங்க அமைச்சர்களையும் ஒருங்கிணைத்து அமுல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்திற்கு ‘இலங்கைக்கான நம்பிக்கை’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் மாகாணத்தில் மார்ச் மாத இறுதியில் ஆரம்பிக்கப்பட உள்ள இந்த பிரச்சாரத்தில் கடந்த இரண்டு வருடங்களில் அரச அமைச்சுக்களினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவிபடுத்தப்பட உள்ளது.
நாமல் ராஜபக்சவை பிரதமராக்குவதே ‘ஸ்ரீலங்கா ஹோப்’ திட்டத்தின் பிரதான நோக்கம் என சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்சவிற்கு பிரதமர் பதவியை வழங்கியதன் பின்னர் இந்த வருட இறுதியில் அரசியலில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக பிரதமர் தனது நெருங்கிய நண்பர்கள் குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ஷ எப்போது பிரச்சினை வந்தாலும் நாட்டை விட்டு ஓடிவிடுவார் என்பதால் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு இப்போதே தயாராகுமாறு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி அண்மையில் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன்படி, 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்புமனுவை உறுதிப்படுத்தும் நோக்கில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடளாவிய ரீதியில் கூட்டத் தொடரையும் பொஹொட்டுக் கட்சிக் கூட்டத்தையும் ஏற்பாடு செய்திருந்தார். அதன் அங்குரார்ப்பண கூட்டம் கடந்த 9ஆம் திகதி அனுராதபுரத்தில் இடம்பெற்றது.
இதன் பின்னணியில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது புதிய அரசியல் திட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
https://bit.ly/3uHGkH