உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு இன்று (18) உத்தரவிட்டுள்ளது.
நீண்ட விசாரணைக்குப் பின், நாமல் பலல்லே, ஆதித்ய படபெந்திகே மற்றும் மொஹமட் இர்ஷதீன் ஆகிய மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னதாகவே புலனாய்வுத் தகவல் கிடைத்தும் அதனை கணக்கில் கொள்ளாது இருந்தமை, தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக கடந்த 2021 மே மாதம் 3 ஆம் திகதி முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிராக குற்றவியல் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டது.
இந்நிலையில் ஹேமசிரி பெர்ணான்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கடந்த 2019 ஜூலை 2 ஆம் திகதி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டனர்.
தண்டனை சட்டக் கோவையின் 296, 298, 326,327,328 மற்றும் 410 ஆம் அத்தியாய்ங்களின் கீழ் இவர்கள் இருவரும் தண்டனைக் குரிய குற்றம் ஒன்றினை புரிந்ததக கூறி அவர்கள் அப்போது கைது செய்யப்பட்டனர்.
இருவர் மீதும் தனித்தனியாக மொத்தம் 855 குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
எனினும் 2019 ஜூலை 9 ஆம் திகதி, அப்போதைய கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன குறித்த இருவருக்கும் பிணையளித்திருந்தார்.
எனினும் அப்பிணை உத்தரவை ஆட்சேபித்து சட்ட மா அதிபர் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்த மீளாய்வு மனுக்கமைய, இந்த விவகாரத்தில் பூஜித், ஹேமசிறி ஆகியோரின் பிணை ரத்து செய்யப்பட்டு 2019 ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
அதன் பின்னர் மேல் நீதிமன்றம் ஊடாக அவர்கள் பிணைப் பெற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவ்விருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் மேல் நீதிமன்றில் முன் வைக்கப்பட்டு விசாரணைகள் தனித்தனியாக இடம்பெற்றுவந்தன.
இந்நிலையிலேயே தற்போது குறித்த இருவரும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய தௌஹீத் ஜமாத் என்ற பயங்கரவாத குழுவால் நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதல்களில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நாட்டில் 250 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதோடு, 500 பேர் காயம் அடைந்தனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதிகோரி நாட்டில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக இந்நாட்டு சட்டம் உரிய முறையில் செயற்படுத்தப் படவில்லை என்றால் சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.