குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர நேற்று (18) தம்மைக் கைது செய்யவோ அல்லது தடுப்புக் காவலில் வைக்கவோ இடைக்காலத் தடையுத்தரவைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு தலைமை தாங்கிய மொஹமட் காசிம் மொஹமட் சஹாரான் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளாமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் பேரில் குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்ட பி அறிக்கை தொடர்பில் தாம் கைது செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஷானி அபேசேகரவை பயங்கரவாத தடைச்சட்டத்தின் 9/1 சரத்திற்கு அமைய கைது செய்யப்படுவதற்கும் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியால் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அநாமதேய மனு ஒன்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட போலியான விசாரணை அறிக்கைக்கு அமைய தனக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள B அறிக்கையையும் வலுவிழக்கச் செய்யுமாறும் அடிப்படை உரிமை மனுவினூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தம்மை கைது செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதனூடாக தமது அடிப்படை உரிமை மீறப்படும் எனவும் ஷானி அபேசேகர தனது மனுவின் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏதேனுமொரு விதத்தில் தாம் கைது செய்யப்பட்டால், உடனடியாக விடுதலை செய்வதற்குரிய உத்தரவை பிறப்பிக்குமாறும், அவ்வாறு இடம்பெற்றால் 100 மில்லியன் நட்டஈட்டை செலுத்துவதற்கு உத்தரவிடுமாறும் ஷானி அபேசேகர தனது மனுவினூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவா, திணைக்களத்தின் பெண் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிரோஷனி பத்திரன உள்ளிட்ட 14 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.