விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஒருவருடகாலத்துக்கு ஒத்திவைத்திருக்கின்ற போதிலும் இந்த வருடம் பெரும்பாலும் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்த முடியுமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புன்சி ஹேவா தெரிவித்தார்.
தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் இந்த வருடம் செப்டெம்பர் 20ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் ஆணைக்குழுக்கு கிடைப்பதன் பிரகாரம் தேவை ஏற்பட்டால் உள்ளூராட்சிமன்ற தேர்தலை இந்த வருட இறுதியில் நடத்த முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மாத்தளை மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் நேற்று இடம் பெற்ற தேர்தல் சர்ச்சைகளை தீர்ப்பதற்கான சட்டம் தொடர்பான பயிற்சி கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசியலமைப்பில் தமக்கு இருக்கும் அதிகாரத்துக்கு அமைய உள்ளூராட்சிமன்ற தேர்தலை உரிய காலத்துக்கு நடத்த முடியாது என தெரிவித்து விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தேர்தலை ஒருவருட காலத்துக்கு ஒத்திவைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் மக்களின் ஐனநாய உரிமையாகும் அதனால் தேர்தல் ஆணைக்குழு என்றவகையில் நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தலை நடத்துவதற்கு தயாராக இருக்கின்றோம்.
சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான தேவையான சூழல் நாட்டில் தற்போது ஏற்பட்டிருப்பதாக தெரிவித்த அவர் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றிக்கொண்டு தேர்தல் நடவடிக்கைகளுக்கு செல்ல முடியும் என்றார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.