அமைச்சுக்களின் பணியை இலகுபடுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சுக்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள போதிலும், அமைச்சுக்களின் பொறுப்பு அரசியலமைப்பு ரீதியாக அமைச்சரவை அமைச்சர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தெரிவித்துள்ளார்.
சில அமைச்சுக்களின் விவகாரங்கள் தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பலர் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சின் செயலாளரை கூட தமது அதிகாரிகளால் சந்திக்க முடியாத நிலை காணப்படுவதாக வனஜீவராசிகள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இதன் போது ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர்களின் அமைச்சுக்கள் விடயங்களை இலகுபடுத்துவதற்காகவே வர்த்தமானி மூலம் ஒதுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி இது தொடர்பில் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்களை அழைத்து விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.
அமைச்சர்களுக்கும் இடையில் மட்டுமன்றி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இடையேயும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மேலும் பல அமைச்சர்களும் கருத்து தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.