கடந்தகால சம்பவங்களுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் தேசபந்து கரு ஜயசூரிய தெரிவித்தார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இலங்கை இதுவரை கண்டிராத மாபெரும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளது. சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஒட்டுமொத்த நாடும் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் குறித்த அறிக்கையில்,
இவ்வாறான சூழ்நிலையில் ஆட்சியிலிருக்கும் அரசாங்கமும் பொறுப்புக் கூறவேண்டியத தரப்பினரும் செயற்பட்டு வரும் விதம் தொடர்பில் திருப்தி அடைய முடியாதுள்ளது.
உரிய தரப்பினர் பொறுப்பற்ற தன்னிச்சையான முறையில் செயற்பட்டு வருகின்றனர். இவற்றினால் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கும்.
மேலும் நாட்டின் ஜனநாயகத்தை பலவீனமடையச் செய்து சர்வாதிகார ஆட்சியை நோக்கி பயணித்தல் மற்றும் சட்ட விரோத குழுக்கள் எவ்வித அச்சமும் இன்றி சுதந்திரமாக செயற்படுவதும், அவற்றிற்கு ஆதரவாக பொறுப்புடையவர்கள் செயற்படும் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது.
இவ்வாறான சூழ்நிலையில் இந்த நாட்டு மக்களின் சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கி இருப்பது தொடர்பில் அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும் என்பது எமது நம்பிக்கையாகும்.
குண்டர் குழுவினரால் ஊடகவியலாளரான சமுதித்த சமரவிக்கிரம அவர்களின் இல்லம் தாக்கப்பட்டமை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதி கேட்டு செயற்பட்ட சமூக செயற்பாட்டாளரான செஹான் மாலக்க அவர்களை கடத்திச் செல்வதைப் போன்று கைது நடவடிக்கைகளை மேற்கொண்டமை, நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் அச்சுறுத்தல்கள் மிகவும் பாரதூரமானவையாகும்.
ஜனநாயகத்தைப் போற்றும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் நாகரீகமான எந்த ஒரு ஆட்சியிலும் இத்தகைய செயல்களை எதிர்பார்க்க முடியாது. ஆட்சியாளர்கள் இவற்றின் மீது உரிய கவனம் செலுத்துவதை அவதானிக்க முடியாத காரணத்தினால் இந்த நாட்டினுள் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது மிகவும் பாரதூரமான விடயமாகும்.
அதன் காரணத்தினால் மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் செயல்களையும், சிவில் உரிமைகளை பாதிக்கும் செயல்களையும் தவிர்த்துக் கொள்ளுமாறு சமூக நீதிக்கான தேசிய இயக்கம் அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறது.
மேற்படி சட்ட விரோத செயல்கள் மேலும் இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்றால் இத்தகைய சம்பவங்களுடன் தொடர்புபட்ட நபர்களுக்கு தகுதி தராதரம் பாராமல் சட்டத்தை நடை முறைபடுத்த வேண்டியுள்ளது. ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறாது இருப்பது கவலையளிக்கின்றது.
வரையறையற்ற அதிகாரத்துடன் செயற்படும் அதிபரை கொண்ட இந்த ஆட்சியில், இவ்வாறான சம்பவங்களுக்கு இடமளிப்பது ஏற்புடையது அல்ல. தலைவருக்கும் அரசாங்கத்திற்கும் எந்த அளவு அதிகாரம் இருந்தாலும், நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை மற்றும் வரவேற்புக்கு அமையவே நாட்டின் இருப்பு உறுதி செய்யப்படும்.
இவ்வாறான செயல்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்காத ஆட்சியினர் மீது மக்களின் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இதன் காரணத்தினால் நாடு முகம் கொடுத்து இருக்கும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சனை மேலும் வலுவடைய கூடும்.
ஆகையால் நாட்டின் இடம்பெறும் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்துகின்றோம். என தெரிவித்துளார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.