பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரான மனுவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கையொப்பம்!இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடளாவிய ரீதியில் கையெழுத்து சேகரிக்கப்பட்டுவரும் மனுவில் நாட்டின் அதியுயர் பதவி வகிக்கும் பிரமுகர் பலரும் கையொப்பமிட்டுள்ளார்.
இந்த பொது மனுவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் தனது கையொப்பத்தை பதிவு செய்துள்ளார். இந்த மனுவில் கையொப்பமிடும் நிகழ்வு நேற்று (18)கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் ஏற்பாடு செய்யப்பட்டது முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தனும் நேற்று [18] அவரது இல்லத்தில் கையெழுத்திட்டார்.
பயங்கரவாதச் சட்டத்தை நீக்குவதற்கான மனுவில் கையொப்பமிடும் பிரச்சாரம் முல்லைத்தீவு ஊடகவியலாளர் சங்கத்தில் பெப்ரவரி 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.பின்னர் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரங்களுக்கும் இதனை கொண்டு செல்ல இலங்கைத் தமிழ் அரசு கச்சி இளைஞர் முன்னணி நடவடிக்கை மேற்கொண்டது.
அண்மையில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பெருந்தொகையான மக்களிடம் குறித்த எதிர்ப்பு மனுவில் கையொப்பம் சேகரிக்கப்பட்டது.
இதன் போது கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தனது கையொப்பத்தைப் பதிவு செய்திருந்தார்.
“பயங்கரவாதச் சட்டத்தை ஒரு பயங்கரமான செயல் என்று வர்ணிக்கலாம். இந்த சட்டத்தை கொண்டுவந்த போது இது ஆறு மாதங்களுக்கு மட்டுமே தற்காலிகமானது என்று கூறப்பட்டது, ஆனால் நாற்பத்தி இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. குறிப்பாக தமிழ் இளைஞர்களை கட்டுப்படுத்துவதற்கு இது பயன்படுத்தப்பட்டுள்ளது” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.