"இலங்கை தேசிய தளத்தில் முழுமையான பிரஜைகளாகும், மலையக தமிழ் மக்களது, அபிலாஷைகள் மற்றும் இலங்கை-இந்திய ஒப்பந்தங்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து மலையக தமிழ் மக்களது அரசியல் ஆவணம் இறுதி வடிவம் பெற்றுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்தார்.
தமுகூ எம்பிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரது பங்குபற்றலுடன், கொழும்பு மன்டரீனா விடுதியில் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து மனோ எம்பி மேலும் கூறியதாவது,
''இந்த ஆவணம் இலங்கை அரசு, இந்திய அரசு, தமிழக அரசு, பிரித்தானிய அரசு ஆகியவற்றுக்கு சமர்பிக்கப்படும். இலங்கையின் அரசியல் கட்சிகளுக்கும், மலையக சிவில் சமூக அமைப்புகளுக்கும் மேலதிக கலந்துரையாலுக்காக வழங்கப்படும்.'' என்று மனோ கணசேன் மேலும் தெரிவித்துள்ளார்.
கண்டி சமூக அபிவிருத்தி மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் பி. முத்துலிங்கம், சமூக செயற்பாட்டாளர் கௌதமன் பாலசந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல் ஆவண வரைபு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இறுதி வடிவம் பெற்றுள்ள இந்த ஆவணம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக கட்சி தலைவர்கள், பிரிட்டன், அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச நாடுகளின் தூதுவர்கள் சர்வதேச நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் அனுப்பப்படுமெனவும் அவர் கூறினார்.
சிவில் சமூக அமைப்புகளுடன் நடத்த உத்தேசித்துள்ள கலந்துரையாடல்கள், இலங்கை, இந்தியா, பிரித்தானியா மற்றும் சர்வேதச அரச நிறுவனங்களுடன் நடத்தவுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படையாக அமையும் என தமிழ் முற்போக்குக் கூட்டணி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மனோ கணேசன் மேலும் கூறுகையில்,
புதிய அரசியலமைப்பு வரைபை தாயரித்து வரும் தனது உத்தேசத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய அரசியலமைப்பு வரைபு எழுதப்பட்டு வருவதையும் நாமறிவோம்.
இந்த பின்னணியில் இன்றைய சூழலில் எழுந்துள்ள புதிய நிலைமைகளை கருத்தில் கொண்டு மலையக மக்கள் தொடர்பாக விரிவுபடுத்தப்பட்ட நிலைப்பாட்டு கோரிக்கைகளை நமது நாட்டு அரசுக்கு அறிவித்து, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட நாம் உதேசித்துள்ளோம்.
அதேவேளை இலங்கை அரசுக்கு இந்திய அரசு வழங்கி வரும் உதவிகள் மற்றும் அதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள புதிய கருத்து பறிமாற்றங்களையும் நாம் அவதானித்து வருகிறோம். இந்த தொடர்பாடல்கள், பொருளாதார ஒத்துழைப்பு விவகாரங்களுடன் மாத்திரம் மட்டுப்படுவது முறையானதல்ல என நாம் நம்புகின்றோம்.
1954 (நேரு-கொத்தாவலை), 1964 (சிறிமா-சாஸ்திரி),1974 (சிறிமா-இந்திரா), ஆகிய ஆண்டுகளில் இலங்கை இந்திய அரசு தலைவர்கள் மத்தியில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களின்படியும், இந்திய பிரதமர்களுக்கும், இலங்கை அரச தலைவர்களான ஜே.ஆர். ஜெயவர்த்தன, ஆர். பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
அதன்படி இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள், குறிப்பாக இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில் இலங்கை அரசுடன் இந்திய அரசுக்கும் இருக்கின்ற கடப்பாடுகள் நல்லெண்ண அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுவே தமிழ் முற்போக்கு கூட்டணியின் எதிர்பார்ப்பாகும்.
இதுபற்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கும், தமிழக அரசியல் கட்சிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பையும் தமிழ் முற்போக்கு கூட்டணி நிறைவேற்றும்.
அதேவேளை மலைநாட்டு தோட்ட தொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வந்து பெருந்தோட்ட பொருளாதாரத்தை கட்டி எழுப்பி, பயன்பெற்றதன் அடிப்படையில் பிரித்தானிய இராணியின் அரசாங்கத்துக்கும், மலையக மக்கள் தொடர்பில் இருக்கின்ற பெரும் கடப்பாட்டையும் எடுத்து கூறி, பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும், ஐ.நா உட்பட சர்வதேச சமூகத்தை அணுகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் முடிவு செய்துள்ளது.
நாம் முன்வைக்க உள்ள, இந்திய வம்சாவளி மலையக மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் இந்த அரசியல் ஆவணம், மேற்கண்ட அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு நட்புறவு மற்றும் நல்லெண்ண நடவடிக்கைகளுக்கும் அடிப்படையாக அமையும் என நாம் நம்புகிறோம்.
இது தொடர்பில் நாடெங்கும் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களினதும், அனைத்து சகோதர மக்களினதும் ஒத்துழைப்புகளையும், ஆதரவையும் நாம் கோருகிறோம். என்று மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.