சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை குறித்த குறிப்புக்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெறுவதற்கான காலம் நிறைவடைந்துள்ளதால், அரசாங்கம் இனி சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைச் சார்ந்திருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எரிபொருள் நெருக்கடியானது வலுசக்தி நெருக்கடியாக அதிகரித்து அதன் மூலம் நாட்டின் வங்கி முறைமையின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“நாட்டின் நிதி நெருக்கடியானது உரிய நேரத்தில் தீர்க்கப்படாமையால் அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட சில குழுக்கள் கூறுவது போன்று உள்நாட்டு செயற்பாட்டின் மூலமோ அல்லது வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வந்து விடுதிகளில் தங்குவதாலோ இந்த நெருக்கடியை தீர்க்க முடியாது.
தற்போதைய நிலைமை தொடருமானால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்க வேண்டாம் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” என்றார்.
சர்வதேச நாணய நிதியத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு பொதுமக்கள் உடன்பட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதாக அரசாங்கம் கூறுவது குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளித்த ஹர்ஷ டி சில்வா, உதவி வழங்கும் போது சர்வதேச நாணய நிதியம் எந்தவொரு நாட்டிற்கும் கட்டுப்பாடுகளை விதிப்பதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் எப்போதாவது அத்தகைய சட்டங்கள் அல்லது ஒழுங்குமுறைகளை விதித்துள்ளதா என்பதை நிரூபிக்குமாறு தற்போதைய இலங்கை அரசாங்கத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சவால் விடுத்துள்ளார்.
பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான செயல்முறை மற்றும் ஒட்டுமொத்த சீர்திருத்தத் திட்டம் உள்ளிட்ட தொடர்புடைய நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் அந்தந்த அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளுடன் மாத்திரமே சர்வதேச நாணய நிதியம் உடன்படுவதாக அவர் கூறியுள்ளார்.
சாத்தியமான வாடிக்கையாளர்களால் சமர்ப்பிக்கப்படும் திட்ட முன்மொழிவுகளை உள்ளூர் வங்கிகள் எவ்வாறு ஒப்புக்கொள்கின்றன என்பதைப் போலவே இதுவும் அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு முன்னர் இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை கோரிய நிலையில், உடன்படிக்கையில் கைச்சாத்திட திட்டமிடப்பட்ட நாளில் அப்போதைய அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி இந்த விடயத்தில் இருந்து நழுவிக் கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.