இலங்கை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 100 பக்தர்களுக்கு கச்சதீவு அந்தோனியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் பக்தர்கள் எவரையும் அனுமதிப்பதில்லை எனவும், அருட்தந்தைகளின் பங்கேற்புடன் மாத்திரம் திருவிழாவை நடத்தவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுமதி வழங்கியிருந்தார்.
எனினும் இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் கச்சதீவு திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்குமாறு அழுத்தம் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது, இலங்கை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தலா 50 யாத்திரிகர்களுக்கு மாத்திரம் கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் கச்சதீவு அந்தோணியார் ஆலய திருவிழா எதிர்வரும் மார்ச் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழாவில் இரு நாட்டு மீனவர்களும் கலந்து கொள்வார்கள். எனினும் கடந்த ஆண்டும் கொரோனா பரவலால் இந்திய பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த ஆண்டும் இரு நாட்டு பக்தர்களுக்கும் அனுமதி கிடையாது என்று இலங்கை அரசு அறிவித்திருந்தமை மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏற்கனவே, குறித்த திருவிழாவுக்கு 500 பக்தர்களை அனுமதிப்பதாக யாழ். மாவட்ட ரீதியாக தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.